Advertisements

திமுக கூட்டணி உண்மையில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய கூட்டணியாக இந்த முறை அமைக்கப்பட்டுள்ளது. மிக வலுவான கூட்டணி அமைக்க முடிவு செய்த திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், ஏற்கனவே இருந்த பெரிய கூட்டணியை மீண்டும 2024ல் விரிவு படுத்தினார்.
அதில் கமலின் மக்கள் நீதி மய்யம் சேர்ந்தது. 2026 சட்டசபை தேர்தலில் மேலும் விரிந்தது. உள்ளே தேமுதிகவை கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்..அடுத்ததாக எஸ்டிபிஐ கட்சியையும் கொண்டு வந்துள்ளார். இது தவிர ஓபிஎஸ்யை கட்சியில் இணைத்தார். அடுத்ததாக ராமதாஸை கூட்டணிக்கு கொண்டுவரப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆனால் விசிக ஏற்குமா என்பது தான் இப்போதைய சிக்கலாக உள்ளது. தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்டமான ‘கூட்டணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தயாராகிவிட்டார். 2024 மக்களவைத் தேர்தலில் 40-க்கு 40 என்ற இமாலய வெற்றியைப் பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்ததாக 2026 சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் முனைப்பில் இருக்கிறார்.
இதற்காக காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் என வலுவான அடித்தளத்துடன் இருந்த கூட்டணியை, 2024-ல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை உள்ளே இழுத்ததன் மூலம் ஸ்டாலின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றார். ஆனால், உண்மையான ஆட்டம் அண்மையில் தான் ஆரம்பமாகியது.
யாரும் எதிர்பாராத விதமாக, பிரேமலாதா விஜயகாந்தின் தேமுதிக-வை தன்பக்கம் இழுத்ததன் மூலம், ஓரளவு விஜயகாந்த் ஆதரவாளர்களை தன் பக்கம் ஸ்டாலின் திருப்பிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். அரசியலின் உச்சகட்ட திருப்பமாகப் பார்க்கப்படுவது, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நேற்றைய வருகைதான். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்த ஒருவரைத் தன் அணியில் இணைத்தார்.
தென் மாவட்டங்களில் அதிமுகவிற்கு முக்கியமான முகமாக இருந்த ஓ பன்னீர்செல்வம் தூக்கியிருக்கிறார். இதோடு நிற்காமல், சிறுபான்மையின வாக்குகளை ஒருமிக்கச் செய்யும் நோக்கில் எஸ்டிபிஐ (SDPI) கட்சியையும் தன் குடைக்குள் கொண்டு இன்று கொண்டு வந்திருக்கிறார். இப்படி எல்லாரையும் வண்டியில் ஏற்றிய ஸ்டாலின், டாக்டர் ராமதாஸையும் இந்த மெகா கூட்டணிக்குள் கொண்டுவர திரைமறைவு வேலைகள் மும்முரமாக நடந்து வருவதாக சொல்கிறார்கள்.
ஒருவேளை ராமதாஸின் பாமக உள்ளே வந்தால், இது தமிழ்நாட்டில் பெரிய திருப்பமாக பார்க்கப்படும். எனினும் ராமதாஸ் திமுக கூட்டணியில் உள்ளே வருவதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. பாமக-வும் விசிக-வும் ஒரே மேடையில் அமருமா? திருமாவளவன் இந்த முடிவை ஏற்பாரா? அல்லது கூட்டணியின் சமநிலை பாதிக்கப்படுமா? என்பதுதான் தற்போதைய மில்லியின் டாலர் கேள்வியாக உள்ளது.
ஸ்டாலின் எப்போதுமே ‘சகலரையும் அரவணைக்கும்’ பாணியைக் கடைப்பிடிப்பவர். அவர் இந்தச் சிக்கலை எப்படித் தீர்க்கப்போகிறார் என்பது இன்னும் சில நாளில் தெரிந்துவிடும்…
Advertisements



