கடந்த 25 ஆண்டுகளில், பிரதமர் மோடி ஆற்றியப் பணிக்காலத்தில், சிறந்த நிர்வாகத்திற்கான பல புதிய அளவுகோல்களை உருவாக்கியுள்ளதாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில், முதலமைச்சராகவும் பிரதமராகவும் நீங்கள் ஆற்றிய பணிக்காலத்தில், சிறந்த நிர்வாகத்திற்கான பல புதிய அளவுகோல்களை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுச் சேவை மற்றும் தேசக் கட்டமைப்பிற்கான உங்கள் பணிகளை நீங்கள் அயராது தொடர்ந்து மேற்கொள்ள, நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் திகழ இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும் திகழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முன்னெடுக்கப்பட்ட பணிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் “ஆசீர்வாத தீபம்” ஏற்றி, பிரதமரின் பொது சேவைக்கு நமது நன்றியைத் தெரிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.


