பெரியார் பெயரையும் அண்ணா பெயரையும் சொல்லிக்கொண்டிருக்கும் கட்சி தங்கள் ஆட்சியில் பாலாற்று மணல் முழுவதையும் சுரண்டி அள்ளி விட்டதாகவும், நாலாயிரத்து 720 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தின் வேளாண்மைக்கும், மக்களுக்கும் உயிரூட்டும் பாலாற்றில் உள்ள மணலை வரைமுறையின்றிச் சுரண்டி அள்ளிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.
மணற்கொள்ளையில் நாலாயிரத்து 730 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறையே கூறியுள்ளதாகவும் விஜய் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அண்ணா ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் தான் இன்னும் உள்ளதாகவும், அண்ணா பெயரைச் சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்துள்ளவர்களால் புதிய பேருந்து நிலையம் கூடக் கட்ட முடியவில்லை என்றும் விஜய் தெரிவித்தார்.



