
சென்னை:
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் சினிமா வாழ்க்கை மற்றும் திருமண நிகழ்ச்சிகள் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டு கடந்த 18-ந்தேதி நெட் பிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பானது.
முன்னதாக ஆவணப் படம் தொடர்பாக வெளியான புரோமோவில் ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகள் தனது முன் அனுமதி பெறாமல் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 கோடி தர வேண்டும் என வழக்கறிஞர் வாயிலாக நயன்தாராவுக்கு தனுஷ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.இதைத்தொடர்ந்து தனுஷ் மீது பல குற்றச்சாட்டுகள் கூறி நயன்தாரா அறிக்கை வெளியிட்டு இருந்தார். தனுஷ் எதிர்ப்பை மீறி 18-ந்தேதி வெளியான ஆவணப்படத்திலும் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இதையடுத்து தனுஷ் நயன்தாரா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டுச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ் வழக்கு தொடர தனுசுக்கு அனுமதி அளித்தார்.
இதையொட்டி நயன்தாரா மீது தனுஷ் இன்னும் சில தினங்களில் வழக்கு தொடர போவதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது வழக்கறிஞர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அடுத்த கட்டமாக நீதிமன்றத்தின் உத்தரவைப் பொருத்து நீதிமன்றத்தில் நயன்தாரா பதில் மனுதாக்கல் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.


