
தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் நலன் காக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை குறித்துச் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலங்களைத் தொகுதி மறுவரையறை என்னும் பெயரில் தண்டிக்கக் கூடாது என்று வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கிற தொகுதி மறுவரையறை விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்தார்.
இப்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையே மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தப்போவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.



