
சட்டுனு சுவையான வேர்க்கடலை சட்னி செய்முறைபற்றி இங்குக் காணலாம்.
பலரது வீட்டிலும் காலையில் இட்லி, தோசை தான் டிபனாக இருக்கும்.இதற்குத் தொட்டுக்க பெரும்பாலும் சட்னி, சாம்பார் தான் செய்வோம்.
அதுவும் சுவையான வேர்க்கடலை சட்னியை செய்து கொடுத்தால் 2 தோசை சாப்பிடுறவங்க கூட 4 தோசை சாப்பிடுவாங்க.
சுவையான வேர்க்கடலை சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 தேக்கரண்டி
வரமிளகாய் – 6
சின்ன வெங்காயம் – 20
பூண்டு – 10 பல்
புளி – சிறிய துண்டு
வேர்க்கடலை – 1/4 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
கொத்தமல்லி – 1 கொத்து
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். அதன் பின் அதில் புளியை சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். பின் அதில் துருவிய தேங்காய், கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களைச் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து, சிறிது நீரை ஊற்றிச் சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நீரை ஊற்றிக் கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு காடாயை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வேர்க்கடலை சட்னி தயார்.
