
புதுடில்லி: டில்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளின் “மகா பஞ்சாயத்து” போராட்டம் நடந்தது. ஹரியானா, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடியுள்ளனர். டில்லியில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வேளாண் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த மாதம் 13ம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகிறார்கள். டில்லி நோக்கி விவசாயிகள் வருவதை போலீசார் தடுத்த நிலையில் அவர்கள் ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் சண்டிகரில் 3 கட்டங்களுக்கு மேல் மத்திய அமைச்சர்கள் குழுப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், டில்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகளின் “மகா பஞ்சாயத்து” போராட்டம் துவங்கியது. ஹரியானா, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடியுள்ளனர்.
பஞ்சாபிலிருந்து 800 பஸ்கள், லாரிகள், ரயில்கள்மூலம் விவசாயிகள் டில்லிக்கு வந்துள்ளனர். 5 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை டில்லி போலீசார் விதித்துள்ளனர். முன்னெச்சரிக்கை ஏற்பாடாகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

