
சேலம் மாநகரில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த குஜராத் பதிவெண் கொண்ட சொகுசு காரை ஆய்வு செய்த காவல் துறையினர் அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 440 கிலோ புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாநகரம், அம்மாபேட்டை காவல் துறையினர் இன்று அதிகாலை உடையாபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சேலம், சென்னை தேசிய புறவழிச்சாலை அருகே சாலை ஓரத்தில் பொலிரோ சொகுசு கார் ஒன்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்ததை கண்டு காவல்துறையினர் அந்த வாகனத்தை நோக்கிச் சென்றனர்.
காவல்துறையினர் வருவதை அறிந்து காரில் இருந்த ஒருவர் அவசர அவசரமாக வெளியேறித் தப்பி ஓடினார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த வாகனத்தைச் சோதனை செய்யும்போது காருக்குள் மூட்டை மூட்டையாகத் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்த காவல்துறையினர் காரில் இருந்த சுமார் 7 லட்ச ரூபாய் மதிப்பிலான 440 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் பெங்களூருவிலிருந்து ஆத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்தக் குட்கா பொருட்களை எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய மேலும் ஒரு வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரைப் பிடிக்கக் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த கார் குஜராத் மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார் என்பதால் இந்தக் கார் யாருடையது, என விசாரித்து வருகின்றனர்.


