
தேசியத் தலைநகர் தில்லியிலும், அதையொட்டிய அரியானா மாநிலத்திலும் இரு நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் நேற்றிரவும் விடிய விடிய மழை பெய்தது. இன்று காலை முதல் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. தில்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் வாகனப் போக்குவரத்துக் குறைவாகக் காணப்பட்டது.
அரியானாவில் நேற்றிரவும் இன்று காலையிலும் பெய்த கனமழையின் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் குருகிராமில் தில்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாகச் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.




