
மனித வாழ்வுக்கு உணவு இன்றியமையாத ஒன்றாகும். ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு ஊருக்கும் பாரம்பரிய உணவு என்று ஒவ்வொன்றும் இருக்கும். பல தலைமுறைகளாக நாம் அப்படிபட்ட உணவை உட்கொண்டு வாழ்ந்து வருகிறோம்.
ஆனால், ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட உணவை உட்கொண்டால் இறப்பு உறுதியென மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அது என்ன உணவு? ஏன் அந்த உணவுக்கு மட்டும் இப்படியொரு ஆபத்து உள்ளது என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
தாய்லாந்து நாட்டின் மக்கள் தங்களின் பாரம்பரிய மீன் வகை உணவான “கொயி பிலா” (Koi pla) என்கிற உணவை உட்கொண்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் கல்லீரல் பாதிப்பு ஆளாகி உள்ளனர். அதாவது, தாய்லாந்தின் வடகிழக்கு கிராமப்புறங்களில் ஏராளமான மக்கள் “கொயி பிலா” என்ற மீன் உணவை மதிய உணவாகச் சாப்பிட்டு வந்துள்ளார்கள். “கொயி பிலா” என்பது மசாலா மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்ட பச்சையான மீன் வகை உணவாகும்.

மிகவும் குறைந்த விலை மற்றும் சுவையும் நன்றாக இருக்கும் என்பதால் இந்த உணவைத் தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் சாப்பிட்டு வருகின்றனர். இதனால் சுமார் இருபதாயிரம் மக்கள் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் மடிந்து வருகின்றனர். ஒரு உணவைச் சாப்பிடுவதால் இறக்கும் அரிய நாடாக இது பார்க்கப்படுகிறது.
சிசிஏ (சோலங் கியோ கார்சினோமா) என்று அழைக்கப்படும் இந்தப் பித்த நாள புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களில் ஒன்று அந்த உணவில் உள்ள ஒட்டுண்ணி தான். ஃப்ளூக் எனப்படும் தட்டைப்புழுதான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம். இது மீகாங் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது. இது பல நன்னீர் மீன்களில் காணப்படுகிறது.
எனவே பல மருத்துவர்கள் அந்தக் கிராமத்துக்கு வந்து பல தலைமறைகளாக இந்தக் கிராம மக்கள் சாப்பிட்டு வரும் உணவில் உயிர் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளதால், மக்கள் பீதியடைந்த வண்ணம் உள்ளனர். மேலும், அப்படியே சாப்பிடும் பட்சத்தில் வேகவைத்து சாப்பிட பழக வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆம், வேகவைத்து சாப்பிடும்போது ஒட்டுண்ணி இறந்து விடும் எனவும் கூறுகின்றனர். மேலும், இந்தக் கல்லீரல் புற்றுநோய் உடனடியாகத் தெரியாதாம். பல ஆண்டு அல்லது பல மாதக்கணக்கில் சாப்பிட்டு வரும் நபர்களுக்கு இது தெரிய வரும் நேரத்தில் அது பரவி அதன் வீரியம் அதிகரித்து இறந்து விடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

