
2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்பது குறித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 49வது லீக் போட்டியின் முடிவில் புள்ளிப் பட்டியல் நிலவரத்தை வைத்துப் பார்க்கலாம். இந்த ஆண்டு இதுவரை 49 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதன் முடிவில் புள்ளிப் பட்டியலில் யாரும் எதிர்பாராத வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் இடத்தில் உள்ளது.
அந்த அணி தனக்கு மீதமுள்ள 4 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். மேலும், மீதமுள்ள நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றாலும், புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. அப்படி இடம்பெற்றால் பிளே ஆஃப் சுற்றில் இரண்டு முறை தகுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அந்த அணி தனக்கு மீதமுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். மேலும், அதிக வித்தியாசத்திலும் வெற்றிகளை பெற வேண்டும். ஏனெனில் அந்த அணியின் நெட் ரன் ரேட் -1.103 என்பதாக உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது தோல்விப் பாதையில் இருந்து மீளுமா என்பது உறுதியாக சொல்ல முடியாத நிலையே உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.
கடைசி (10வது) இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த முதல் அணியாக உள்ளது. அந்த அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மட்டுமே பெற்றிருக்கிறது. 8 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. சிஎஸ்கே அணி தனக்கு மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 12 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த அணியாக உள்ளது.



