
அமமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியைப் போலீசார் தேடி வருகின்றனர்…
சென்னை நொளம்பூர் அடுத்த ரெட்டிபாளையத்தில் ஜெகன் என்பவர் மீன்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று இரவு ஜெகன் கடையில் இருந்தபோது மீன் வாங்குவது போல் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கொலை நடைபெற்றதை அடுத்த மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலை சம்பவம்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. திருவாரூர் முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (48). 2021ம் ஆண்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் தலை துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அமமுக பிரமுகரான ஜெகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கூலிப்படையுடன் ராஜேஷை கொலை செய்தது தெரியவந்தது.
கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற ஜெகன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். சொந்த ஊரில் இருந்தால் தன்னுடை உயிருக்கு ஆபத்து என்பதால் யாருக்கும் தெரியாமல் குடும்பத்துடன் சென்னை நொளம்பூரில் தலைமறைவாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷ் கொலைக்குப் பழி வாங்கும் விதமாக அவரது கூட்டாளிகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெகனை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

