Contraceptive pills: 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம்!

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 7 மாத கர்ப்பிணிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. மருத்துவர் உள்பட 3 பேர் கைது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கரைமேட்டு பகுதியை சேர்ந்தவர் வீரமணி(கூலி தொழிலாளி). இவரது மனைவி ரமணா. இவர்களுக்கு தாரணி என்ற மகளும், ஹரிபிரசாத் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ரமணா கர்ப்பம் ஆனார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் 3-வது குழந்தை தேவை இல்லை என ரமணா எண்ணினார். இதனால் கர்ப்பத்தை கலைக்க அங்குள்ள ஒரு மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி தின்றதாக கூறப்படுகிறது. இதில் ரமணாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது.

உடனே அவரது உறவினர்கள் ரமணாவை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதை அடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டதால் அவரது வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது. உடனே சிசுவை டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர். இதற்கிடையே ரமணாவுக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரமணா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தா.பழூர் ஓய்வு பெற்ற பெண் மருத்துவர் தேன்மொழி, செவிலியர் சக்திதேவி, அவரது உதவியாளர் வெற்றிச்செல்வி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *