CP Radhakrishnan:இம்மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்!

Advertisements

புதுச்சேரி:தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள் இன்று புதுவையில் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்குப் புதுவை அரசு சார்பில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காமராஜர் பிறந்தநாளை கொண்டாடுவது நமக்கு நாமே சேர்த்துக்கொள்ளும் சிறப்பு. இந்தப் புனிதநாளில் தான் முத்துக்குமரப்ப ரெட்டியார் மறைந்துள்ளார். ரெட்டியார் சமூகம்தான் புதுவையில் அதிகளவு நிலம் வைத்திருந்தனர். அந்தச் சமூகத்திலிருந்துதான் முத்துக்குமரப்ப ரெட்டியார் சோசலிச இயக்கத்தை ஆரம்பித்துப் பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு எதிராக விடுதலை போராட்டத்தைத் தொடங்கினார்.

நெட்டப்பாக்கத்தை சுற்றியுள்ள 60 கிராமங்களுக்கு விடுதலை பெற்று, முதல் முதலாகத் தேசியக் கொடியை, சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்த பெருமைக்குரியவர். சமுதாய நலனே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் நமக்கு இன்றும் வழிகாட்டியாக உள்ளனர். அவர்களின் வழியில் நம் பயணத்தைத் தொடர்வதுதான் நம் சமூகம் முன்னேற உகந்ததாக அமையும்.

ஓரிரு நாளில் புதுவை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்கும். இந்த முறை பட்ஜெட் சிறப்பாக அமைய பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

எந்தத் திட்டங்கள் பாதியில் நிற்கிறதோ அதற்கு முன்னுரிமை கொடுத்து முடிக்கப்படும். எழுச்சி மிகு புதுவை என்பதே எங்கள் நோக்கம், அதற்கான பயணம் தொடரும்.

அமைச்சர் திருமுருகனுக்கு முதலமைச்சர் விரைவில் இலாகா ஒதுக்கு வாரென நம்புகிறேன். பா.ஜனதா எம்.எல்.ஏக்கள் என்னைச் சந்தித்து தொகுதி பிரச்சனைகளை மட்டும் பேசினார்கள். புதுவைக்கு கூடுதல் நிதி வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி முதலில் முழுமையாக மக்களைச் சென்றடைய வேண்டும். அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

என்கவுண்டர் கூடாது என்பதல்ல என் கருத்து. என்கவுண்டர் வராமல் இருக்க ரவுடிகள் உருவாகாமல் இருக்க வேண்டும். அதற்கு அடிப்படையிலான கட்ட பஞ்சாயத்துகள் இருக்கக் கூடாது என்பதே என் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *