
200 நாடுகள் பங்கேற்ற COP 28 வரலாற்று சிறப்புமிக்க பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அடுத்து துபாய் சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
துபாயில் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு நவம்பர் 30-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அடுத்த இரண்டு வாரங்களில் இறுதி காலநிலை ஒப்பந்தம் மற்றும் புதைபடிவ எரிபொருள்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியது.
இதையடுத்து உலக அளவில் பருவநிலை மாறுபாடுகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை காண்பதற்கான தீர்வுகள் பற்றி ஆலோசிக்க ஆண்டுதோறும் ஐ.நா.வின் சார்பில் உச்சி மாநாடு உறுப்பு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று துபாய் எக்ஸ்போ நகர வளாகத்தில் காப்-28 உலக பருவநிலை உச்சி மாநாடு கோலாகலமாக தொடங்கியது.
இந்த மாநாட்டை அமீரக மந்திரியும், காப்-28 மாநாட்டின் தலைவருமான டாக்டர் சுல்தான் ஜாபர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஐ.நா உச்சி மாநாட்டுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உச்சி மாநாட்டில் இந்திய அரங்கை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டுத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த இந்திய அரங்கு திறப்பு விழாவில் மத்திய மந்திரியுடன் அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நவம்பர் 30-ஆம் தேதி மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் துபாயில் தரையிறங்கிய பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், “”காப்-28 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக துபாயில் தரையிறங்கியுள்ளேன். சிறந்த கிரகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டின் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறோம்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி உச்சி மாநாட்டில் பங்கு கொள்ள டிசம்பர் 1-ஆம் தேதி காலை 11.00 மணியளவில் சென்றார். அப்போது கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி வளர்ச்சி மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் சமநிலையில் இந்தியா முன்னோடியாக உள்ளது என்று பெருமிதம் கொண்டார். மேலும் அதிகரித்து வரும் பருவநிலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவைக்கேற்ப வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிதியுதவி மற்றும் தொழிநுட்பங்களைப் பரிமாற்றம் செய்வது அவசியம் என்று மோடி வலியுறுத்தி பேசினார்.
பசுமையானதும், வளமானதுமான எதிர்காலத்தை கூட்டாக உருவாக்குவதில் இந்தியாவும், ஐக்கிய அரபு நாடுகளும் உறுதியாக உள்ளன. பருவநிலை பாதுகாப்பு நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தக் கூட்டு முயற்சியில் இரு நாடுகளும் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம். எதிர்காலத்தின் நலன் கருதி இந்த உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார் பிரதமர் மோடி. மேலும் அடுத்த ஆண்டு COP 28 மாநாடு இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்.
இந்த COP28 ஐ.நா. உலக பருவநிலை உச்சி மாநாடு டிசம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


