
சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா-எல் 1 விண்கலம் ‘லெக்ராஞ்சியன்’ புள்ளி-1ஐ நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ, கடந்த செப்டம்பர் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘லெக்ராஞ்சியன்’ புள்ளி-1ஐ சென்றடையும் என்றும், அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.
இதற்கிடையில், ஆதித்யா எல்-1 விண்கலம் வருகிற ஜனவரி 7-ம் தேதி ‘லெக்ராஞ்சியன்’ புள்ளியைச் சுற்றி நிலைநிறுத்தப்படும் என்று சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம்குறித்து முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது. விண்கலத்தில் 7 கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்தக் கருவிகளில் இரண்டாவது கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) என்ற கருவி தற்போது செயல்படத்தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தக் கருவியின் மூலம் சூரிய கதிர்களிலிருந்து வெளியேறக்கூடிய புரோட்டான் மற்றும் ஆல்பா துகள்களின் எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


