Condemnation: விவசாயிகள் கைதுக்குக் கண்டனம்!

Advertisements

விளை நிலங்களைக் காப்பாற்ற போராடிய விவசாயிகளைத் திமுக அரசுக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது  கொடுங்கோன்மையின் உச்சம் எனச் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

நில அபகரிப்புக்கு எதிராகப் போராடிய விவசாயிகள்மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த திமுக அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திருவண்ணாமலை மாவட்டம்  அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மா கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள தேத்துரை, குரும்பூர், வீரம்பாக்கம், நெடுங்கள், இளநீர் குன்றம், நர்மாபள்ளம், வட ஆளப்பிறந்தான் மற்றும் அத்தி,

ஆகிய 9 ஊராட்சிகளுக்கு  உட்பட்ட ஏறத்தாழ  3174 ஏக்கர் வேளாண் விளை நிலங்களைத் தமிழ்நாடு அரசுத் தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) சார்பில் புதிதாகத் தொழில் வளாகம் அமைப்பதற்காக வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  கடந்த 150 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வந்த  விவசாயிகளைத் திமுக அரசு எதேச்சதிகாரப்போக்குடன் கைது செய்து சிறையிலடைத்தது.

தற்போது, தாய்நிலத்தை தற்காக்க போராடிய அப்பாவி  விவசாயிகளில் எழுவர்  மீது சிறிதும் மனச்சான்றின்றி திமுக அரசுக் குண்டர் சட்டம் தொடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. விளைநிலங்களை அழித்துத் தொழிற்சாலை அமைக்கப்படுவதை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடிவரும் வேளாண் மக்களின் உரிமைக் குரலுக்குச் சிறிதும் மதிப்பளிக்காது, அவர்களை மிரட்டி நிலங்களைப் பறிக்கும் திமுக அரசின் செயல்  கொடுங்கோன்மையாகும்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதுபோல் நாடகமாடிய திமுக,  ஆட்சி – அதிகாரத்திற்கு வந்தவுடன் எட்டு வழிச்சாலை திட்டத்தைப் பசுமைவழிச்சாலை என்ற பெயரில் மீண்டும் நிறைவேற்ற முயல்வதும், கோவை – அன்னூர், திருவண்ணாமலை – பாலியப்பட்டு, செய்யாறு – மேல்மா, கிருஷ்ணகிரி – ஓசூர் உள்ளிட்ட இடங்களில் வேளாண் மக்களின் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்களை அபகரித்துத் தொழில் வளாகம் அமைக்க முயல்வதும்,

ஆகவே, திமுக அரசு வேளாண் பெருங்குடி மக்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தினை உடனடியாக ரத்து செய்வதுடன், எவ்வித வழக்கும் பதியாமல் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், வேளாண் நிலங்கள்மீது தொழிற்சாலைகளை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *