காமன்வெல்த் போட்டி – தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!

Advertisements
காமன்வெல்த் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின், ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன் சித்ரவேலுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வ பிரபுக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேலுக்கு 30 இலட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற  செல்வ பிரபுக்கு 20 இலட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயின்று, முறையான பயிற்சி பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைக்குப் பெருமை சேர்ப்பதாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் வெற்றியைத் தேடித்தந்ததோடு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *