
கோவை போத்தனூர் ரயில் நிலையம் அருகே சிறுத்தை நடமாடுவதாகப் பரவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அது காட்டுப்பூனை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து உள்ளதால், நகரை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது காட்டுவிலங்குகள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
சில நாட்களுக்கு முன் வெள்ளலூரில் சிறுத்தை நடமாடுவதாகச் சில வீடியோக்கள் வெளியாகிப் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, போத்தனூர் ரயில் நிலையம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது.
அந்த வீடியோவில், சிறுத்தை போன்ற தோற்றமுடைய ஒரு விலங்கு சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து தாவி மதில் மீது ஏறி ஓரிடத்தில் பதுங்கி இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளதுடன் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையிடம் விளக்கம் கேட்டபோது, வீடியோவை ஆய்வு செய்த அதிகாரிகள் அது சிறுத்தை இல்லை என்றும், காட்டுப்பூனை என்றும் தெரிவித்துள்ளனர்.


