
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 100 கோடி மதிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திட்டப் பணிகளை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சியில் 99.64 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.இதில் மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 80 வது வார்டு பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் வார்டு எண் 80 க்குட்பட்ட அசோக் நகர், அய்யப்பா நகர், சுப்பையா லே அவுட், கோவிந்தசாமி லே அவுட் அன்னை அபிராமி நகர், கன்னிகா அவென்யு, பாரதி நகர், பழனியப்பா நகர், குமரேசன் நகர், நாடார் வீதி, கீரை தோட்டம் ஆகிய பகுதிகளில் ரூபாய் ஒரு கோடி 85 இலட்சம் மதிப்பீட்டில் தார்த்தளம் புதுப்பித்தல் பணிகளை, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
இதில் பேசிய அவர், கோவை மாநகராட்சிக்கு முதல்வர் தனி கவனம் செலுத்தி பணம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் இதன் ஒரு பகுதியாகச் சுமார் 100 கோடி மதிப்பில் 1178 பணிகள் துவக்கி வைக்கப்படுவதாகத் தெரிவித்தார். இந்தப் பணிகள் முடியும்போது பெருவாரியான பிரச்சனைகள் முடியும் எனவும் தெரிவித்தார். இதுமட்டுமின்றி 40 கோடி ஒதுக்கீட்டில் ஆங்காங்கே குடிநீர் இணைப்பு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் 3 இடங்களில் தங்கும் விடுதிகள் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இப்பணிகளை விரைவாக முடிப்பதற்காக அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுப்படுவார்கள் எனவும், மாநகராட்சி ஆணையாளர் மேயரும் பணிகளைத் தொடர்ந்து கண்காணிப்பார்கள் எனவும் கூறினார். தமிழ்நாடு முழுவதும் இப்பணிகள் நடைபெற்றாலும் கோவை மாவட்டத்தில் மிகுந்த கவனத்துடன் அதிக அக்கறை எடுத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், ஆணையாளர் சிவ குரு பிரபாகரன், மேயர் கல்பனா, கவுன்சிலர் மாரிசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


