Coimbatore: 5 மாத குழந்தையை சக பயணியிடம் ஒப்படைத்துவிட்டு தாய் எஸ்கேப்!

கோவை நகர  பேருந்தில் 5 மாத குழந்தையை உட்கார்த்து இருந்த இளம்பெண்ணிடம் கொடுத்துவிட்டு தாய் தலைமறைவானார். குழந்தை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது.

திருச்சியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண் கோவையில் தங்கி ஆடிட்டிங் படிப்பு படித்து வருகிறார்.
இவர்  சொந்த ஊர் செல்வதற்காக இன்று  சனிக்கிழமை காலை 9 மணி அளவில் காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் நகர பேருந்தில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில்,  அருகில் குழந்தையுடன் நின்று இருந்த பெண் ஒருவர் தன்னிடம் இருந்த ஐந்து மாத பெண் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார்.

ரயில் நிலையம் வந்தபின் திவ்யா இறங்குவதற்காக தாயை தேடிய போது பேருந்தில் அவரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த திவ்யா இதுகுறித்து கண்டக்டரிடம் தெரிவித்தார்.

பேருந்தை  ரயில் நிலையம் அருகே நிறுத்தி விட்டு குழந்தையின் தாயை பேருந்து  முழுவதும் தேடினர். ஆனால் அந்தப் பெண் இல்லாததால் உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது.

போலீசார் அங்கு வந்த நிலையில் குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கபட்டது. குழந்தை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தை பராமரிப்பு வார்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயின் அடையாளங்களை பெற்று காந்திபுரம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் குழந்தையின் தாய் யார் என்பது குறித்தும் ,  அல்லது திருடப்பட்ட குழந்தையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *