China Vs India: அருணாச்சல் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான்!

அருணாச்சல் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான். எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ராணுவம் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி: சீனாவின் இந்த மறுபெயரிடும் நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா இடையே எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை. இதைப் பயன்படுத்தி, இந்திய எல்லையில் சீனா பல ஆண்டுகளாக வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைகளைக் கபளீகரம் செய்யும் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. கடந்த 2017ம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தின் 6 இடங்களுக்கு முதல் முறையாகச் சீன மொழியில் பெயர் சூட்டியது. அதைத் தொடர்ந்து, 2021ல் 15 இடங்களுக்கும், 2023ல் 11 இடங்களுக்கும் புதிய பெயர்களைச் சூட்டியது.

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும் என்பதை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளே அங்கீகரிக்கின்றன. ஆனால் இதை ஏற்காத சீனா, அருணாச்சல பிரதேசம் திபெத்தின் தெற்கு பகுதியெனச் சொந்தம் கொண்டாடுகிறது. அருணாச்சல பிரதேசத்திற்கு ஜங்னான் எனவும் பெயர் சூட்டி உள்ளது. இதனிடையே நேற்று அருணாச்சலில் உள்ள 11 குடியிருப்புப் பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் சிறு நிலப்பகுதியென 30 இடங்களுக்குச் சீனாவின் மாண்டரின் மொழியிலும், திபெத்திய மொழியிலும் புதிய பெயரைச் சூட்டி சீன சிவில் விவகார அமைச்சகம் தனது இணையதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவின் இந்த மறுபெயரிடும் நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அருணாச்சலில் ஊர்களின் பெயரை மாற்றிய சீனாவின் செயல் அர்த்தமற்றது. உங்கள் வீட்டிற்கு நான் பெயர் சூட்டினால், அது என்னுடையதாகிவிடுமா? பெயரை மாற்றுவதால் எந்த மாற்றமும் நிகழாது. சீனாவின் நடவடிக்கைகளை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். அருணாச்சல் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான். எல்லை கட்டுப்பாடு கோடு அருகே ராணுவம் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *