
புதுடில்லி: விமானிகள் ஸ்டிரைக் காரணமாக விஸ்தாரா விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டன. மேலும் பல விமானங்கள் தாமதமாகி உள்ளன. இது பயணிகள் மத்தியில் குழப்பத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
விஸ்தாரா ஏர்லைன்ஸை நடத்தி வந்த டாடா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்தையும் வாங்கியது. இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைக்க டாடா நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.
இதனால், விஸ்தாரா நிறுவனங்களின் விமானிகளுக்கான சம்பளம் மற்றும் விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமானிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமானங்களை இயக்குவதில் விஸ்தாரா நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாகப் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும் பல விமானங்கள் தாமதமாகி உள்ளன. கடந்த ஓரிரு மாதங்களாகச் சில விமானங்கள் தாமதம், ரத்து என அந்த நிறுவனம் சிக்கலைச் சந்தித்த நிலையில் தற்போது அது பெரிதாகி உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு 300 விமானங்களை இயக்கும் அந்த நிறுவனம், நேற்று 50 விமானங்களை ரத்து செய்தது. இன்று இது 60 ஐ தாண்டும் எனத் தெரிகிறது.
இது அந்த நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்குக் கோபத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. பலர் தங்களது கோபத்தை சமூக வலைதளம்மூலம் வெளிப்படுத்தினர். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விஸ்தாரா நிறுவனத்திடம் மத்திய அரசு அறிக்கை கேட்டு உள்ளது.
