Advertisements

சென்னையில் வருகின்ற 13 ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத் தளத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். இதில், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பணப் பலன்கள், விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தராமல் காலம் தாழ்த்தி வரும் திமுக அரசைக் கண்டித்தும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக சார்பில், வருகின்ற 13 ஆம் தேதி சென்னை, பல்லவன் இல்லம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலும், கழக அண்ணா தொழிற்சங்கப் போவைச் செயலாளர் கமலக்கண்ணன், தலைவர் இராசு, பொருளாளர் அப்துல் அமீது ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் எனக் கூறினார். இதையடுத்து, அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், அண்ணா தொழிற்சங்கப் போவையின் மாநில நிர்வாகிகள், தமிழ் நாடு முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொழிலாளர்களும், பொதுமக்களும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
Advertisements



