
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் தந்தை மற்றும் சகோதரனுக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவள்ளுர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வரை 15 வயது சிறுமியை அவரின் தந்தை உதயகுமார் சகோதரன் ஜெய் ஆகிய இருவரும் பல முறை பாலியில் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்த நிலையில் அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார்.
இந்த வழக்கின் முடிவில் தந்தை மற்றும் சகோதரன் இருவருக்கும் உறவினர் மற்றும் ரத்த சம்பந்த உறவுமுறை என்ற இரு பிரிவுகளின் கீழ் தலா 14 ஆண்டுகள் சிறையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிபதி உமாமகேஸ்வரி விதித்தார்.
மேலும், இளம்பெண்ணுக்கு 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் தீர்பளித்தார். இதையடுத்து, இருவரையும் திருவொற்றியூர் காவல்துறையினர் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


