
சென்னை விமான நிலைய டோல்கேட் பகுதியில் வாகன ஓட்டிக்கும் டோல்கேட் ஒப்பந்தப் பணியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களின் கேமராவையும் செல்பேசிகளையும் பறித்து டோல்கேட் ஒப்பந்தப் பணியாளர்கள் அட்டூழியம் செய்துள்ளர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பகுதியில் மருத்துவரின் காரைத் தடுத்து நிறுத்தி டோல்கேட் பணியாளர்கள் கட்டணம் கேட்டுள்ளனர். 10 நிமிடங்கள் வரை காசு இல்லாமல் பயணிக்கும் அனுமதி உள்ள நிலையில் 11 நிமிடங்கள் ஆனதால் எண்பது ரூபாய் செலுத்தும்படி கோரியுள்ளனர்.
அப்போது ஓட்டுநருக்கும் டோல்கேட் ஒப்பந்தப் பணியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரின் வீடியோ கேமராவை ஒமேகா என்டர்ப்ரைசஸ் ஒப்பந்த நிறுவனத்தின் பணியாளர் பறித்ததோடு செய்தி போடக்கூடாது என்றும், டோல்கேட் பிரச்சனை குறித்துச் செய்தி வெளியே வந்தால் அவ்வளவுதான் என்றும் கூறி டோல்கேட் பணியாளர்கள் செய்தியாளர்களை மிரட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி செல்போனை பிடுங்கி எறிந்ததோடு டிராபிக்கை சரி செய்யாமல் பணியாளர்கள் ரவுடிகளை போல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உடந்தையாகவே காவல்துறையினரும் செயல்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு சென்னை விமான நிலையத்தில் டோல்கேட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



