
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. கனமழையாக இல்லாமல் ஒருசில நேரங்களில் மிதமாகவும் சில சமயங்களில் சிறு சிறு சாரலாகவும் பெய்கிறது. 4 நாட்களாக ஊட்டி, குற்றாலம் போன்ற இயற்கையான மழைச்சாரல் சூழலை சென்னை மக்கள் அனுபவித்து வருகிறார்கள். மேகமூட்டமும், மப்பும் மந்தாரமுமான சூழல் நிலவி வருகிறது. சிறு தூறல் சாரலாக பொழிவதால் மலைப் பிரதேசத்தில் இருப்பது போன்ற உணர்வு காணப்படுகிறது.
நேற்று இரவு முழுவதும் மழை தூறிக் கொண்டே இருந்தது. ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. விடிய விடிய சாரல் மழை பெய்ததால் குளிர்ந்து காணப்பட்டது. சென்னையில் வெயில் தாக்கம் இல்லாமல் மழை தூறல் இருந்து கொண்டே இருப்பதால் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டு குளிர்ச்சி நிலவுகிறது. சென்னை மக்கள் 4 நாட்களாக வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தப்பித்து ரம்மியமான சூழலை அனுபவித்து வருகிறார்கள்.
குளிர்ந்த காற்றுடன் மழைச்சாரல் உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரவு-பகலாக அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையால் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றன. மெட்ரோ ரெயில் பணி, மேம்பால பணிகள் நடைபெறுகின்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த மழையால் சாலையில் சிறு குழிகள் தோன்றி உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

