
சென்னையில் இன்ஸ்டாகிராம் காதலியை முதல் நாளும், வீட்டில் பார்த்த பெண்ணை 2-வது நாளும் திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கேளம்பாக்கம் சர்ச் தெருவைச் சேர்ந்த பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த 2022ல் மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டு திருநின்றவூரில் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
திருமணத்துக்குப் பின் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணிடம் நகை, பணம் கேட்டு டார்ச்சர் செய்து துன்புறுத்திய பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங், ஒருகட்டத்தில் அவரைப் பிரிந்து தன் வீட்டிற்குச் சென்றுள்ளார். மேலும் அவரது உடனான தொடர்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து இளம்பெண் அவரைத் தேடி கேளம்பாக்கம் வீட்டுக்குச் சென்றார். அப்போது அந்தப் பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங், காதல் திருமணம் செய்த அடுத்த நாளே வீட்டில் பார்த்த பெண்ணையும் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகப் பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் மிரட்டியுள்ளார். அப்படி இருந்த போதிலும் தான் ஏமாந்ததை தாங்க முடியாமல் முதல் மனைவி பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கேளம்பாக்கத்தில் தலைமறைவாக இருந்த பிரின்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

