Chennai High Court:ராமர் பாதத்தை ஊர்வலமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்க முடியாது!

Advertisements

திருப்பூரில் இருந்து அயோத்திக்கு ராமர் பாதத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் தொடக்க நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அகில பாரத இந்து மகாசபாவின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதன்படி, உத்தரபிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதைக் கொண்டாடும் விதமாக திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையத்தில் உள்ள கருப்பராயன் கோவிலில் ராமர் பாதங்களை வைத்து பூஜை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அப்படி பூஜை செய்யப்படும் பாதங்களை ஊர்வலமாக ராமேஸ்வரம் வரை எடுத்துச் சென்று சிறப்பு பூஜை செய்து அங்கிருந்து அயோத்திக்கு ரயில் மூலம் எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா மற்றும் வாகன ஊர்வலத்திற்கு அனுமதி அளித்து உரிய காவல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது காவல் துறை தரப்பில், மனுதாரர் ஏற்கனவே அரசியல் உள்நோக்கத்தோடு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அவர் ஏற்கனவே இந்து முன்னணி அமைப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தது தொடர்பான புகார் மனுதாரர் மீது உள்ளது என்பதால் இந்த விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பின் வாதத்தை ஏற்ற நீதிபதி, ராமர் பாதம் கொண்டு செல்லும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *