
மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு பள்ளிகளில் சாதி பெயர் இருக்கலாமா என அரசிடம் நீதிபதி கேள்வியெழுப்பினார்.
சென்னை:கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பான வழக்கைச் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்வராயன் மலையில் 150 பள்ளிகள் இருப்பதாகவும், பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த அறிக்கையைப் பார்த்த நீதிபதி பாலசுப்ரமணியம், கல்வராயன் மலைப்பகுதியில் அடிப்படை வசதிகள் உள்ளதா எனவும், மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு பள்ளிகளில் சாதி பெயர் இருக்கலாமா எனவும் அரசிடம் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசுபள்ளிகளில் சாதி பெயர் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்தார். தெருக்கலில் உள்ள சாதி பெயரை நீக்கியது போல அரசு பள்ளிகளும் சாதி பெயரை நீக்கிவிடுங்கள் என நீதிபதி கூறினார்.
கல்வராயன் மலை பகுதிகளைப் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் தலைமையில் மீண்டும் ஆய்வுசெய்ய வேண்டும் எனவும், அரசு குழுவுடன் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணியும் உடன் செல்ல வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.


