
சென்னை: சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழகத்தின் முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்தின் மகன் அருண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மைக்காலமாகப் போதை பொருள்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதற்கேற்ப தமிழகத்தில் அவ்வப்போது கஞ்சா போதையை பயன்படுத்தி கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளைக் கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நைஜீரியாவை சேர்ந்த ஜான் எஸி, மெக்கலன், அருண் ஆகிய மூவர். இவர்களில் அருண் என்பவர் முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்தின் மகன் எனத் தெரியவந்தது. இதையடுத்து இந்த மூவரிடமிருந்து 2.5 கிராம் மெத்தபெட்டமைன், ஒரு லட்சம் ரொக்கம், செல்போன்கள் உள்ளிட்டவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர்களுக்குப் பின்னால் யாரேனும் நெட்வொர்க் உள்ளனரா என்பதை விசாரித்து வருகிறார்கள். தமிழக முன்னாள் டிஜிபியின் மகனே இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


