Chennai Corporation:அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.! திடீரென அறிவித்த தமிழக அரசு!

Advertisements

அரசு ஊழியர்களுக்குக் கடந்த வாரம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தினக்கூலியை அதிகரித்து சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அம்மா உணவக திட்டம்

ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில், கடந்த 2015ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. அம்மா உணவகத்தில் அனைத்து தரப்பு மக்களும் தினந்தோறும் காலை மற்றும் மதிய வேளையில் குறைந்த செலவில் உணவைச் சாப்பிட்டு வருகின்றனர். காலையில் சாம்பாருடன் இட்லி ரூ.1-க்கு வழங்கப்பட்டு வருகிறது. மதியம் சாம்பார் சாதம் ரூ.5-க்கும், தயிர் சாதம் ரூ.3-க்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர வாரத்திற்கு ஒரு நாள் வெரைட்டி சாதமாகப் புளியோதரை மற்றும் தக்காளி சாதம் ரூ.5-க்கு வழங்கப்படுகிறது. இந்த அம்மா உணவகம் கொரோனா காலத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

பராமரிப்பின்றி அம்மா உணவகம்

இதனையடுத்து நடைபெற்ற ஆட்சிமாற்றத்தால் அம்மா உணவகம் மூடப்படும் என்ற தகவல் வெளியானது, இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சென்னை மாநகராட்சி சார்பாகக் கூறுகையில், அம்மா உணவகத்திற்கு அதிக அளவில் மக்கள் வரவில்லையென்றும், நஷடத்தில் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த வாரம் அம்மா உணவகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அம்மா உணவகங்களைப் புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்கச் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில், சுமார் ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டது.

ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கடந்த 8 ஆண்டுகளாக அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது. அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்த்தி வழங்கப்படுவதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.அதன் படி ரூ.300 ஆக இருந்த தினக்கூலி பணியாளர்களின் ஊதியத்தை ரூ.325 ஆக உயர்த்தி மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னை மாநகாட்சிக்கு கூடுதலா 3.07 கோடி ரூபாய் செலவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *