Villivakkam: நோன்பு கஞ்சியோடு தெரியாமல் பல் செட்டையும் விழுங்கிய 93 வயது மூதாட்டி!

Advertisements

சென்னை வில்லிவாக்கத்தில் நோன்பு கஞ்சி அருந்திய மூதாட்டிக்கு, பல் செட் கழன்று உணவுக்குழாயில் சிக்கிய நிலையில், 4 மணி நேர சிகிச்சைக்குப்பிறகு பல் செட் எடுக்கப்பட்டது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 93 வயதான மூதாட்டி ரஷியா பேகம் என்பவர், கடந்த புதன் கிழமை அன்று மாலை ரமலான் நோன்பை முடித்துக்கொண்டு நோன்பு கஞ்சி குடித்துள்ளார். அப்போது அவர் அணிந்திருந்த பல்செட்டும் நோன்பு கஞ்சியோடு சென்று உணவுக்குழாயில் சிக்கியுள்ளது.

கொக்கி போன்ற வடிவமைப்பை கொண்ட அந்த பல்செட், உணவு குழாயில் சிக்கிக் கொண்டதால் வலியால் துடிதுடித்துப் போன அம்மூதாட்டியை அவரது மகள் ஷாகீர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இருப்பினும், மூச்சு விடமுடியாமலும் எச்சில் முழுங்க முடியாமலும் தவித்து கொண்டிருந்துள்ளார் மூதாட்டி. உடனடியாக அவரை அங்கிருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர் அவரது குடும்பத்தினர்.

ஏற்கெனவே குறைவான ரத்த அணுக்கள், ரத்தக் கொதிப்பு போன்ற இணை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவரை, உள் நோயாளியாக அனுமதித்த மருத்துவக் குழுவினர், அவருக்கு பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து, மூதாட்டியின் உணவு குழாயில் சிக்கி கொண்டிருந்த பல் செட்டை, உள் நோக்கி கருவி மூலம் லாவகமாக எடுத்தனர் மருத்துவர்கள்.

சுமார் 4 மணி நேர மருத்துவர்கள் மேற்கொண்ட தொடர் சிகிச்சையால் மூதாட்டி குணமடைந்து வருகிறார். இதையடுத்து, மருத்துவக் குழுவினருக்கு மூதாட்டியின் குடும்பத்தார் நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *