புயல் சேதத்தை பார்வையிட மத்திய குழு வருகை!

Advertisements

புதுச்சேரி:

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தபோது புதுச்சேரியில் சூறைகாற்றுடன் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. கனமழை பொழிந்தது.

இதனால் புதுச்சேரியில் 50 ஆயிரம் வீடுகள், 10 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களில வெள்ளம் சூழ்ந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. 50 கி.மீ. மேல் சாலைகள் சேதமடைந்தது. மழை வெள்ளத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து தமிழக பகுதியில் பெய்த கனமழையை அடுத்து வீடூர், சாத்தனூர் அணைகள் திறக்கப்பட்டது. இதில் தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் ஆற்றங்கரையை ஒட்டிய புதுச்சேரி கிராமங்கள், விளை நிலங்களில் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்பட்டது.

வெள்ள நிவாரணமாக அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ரூ.5 ஆயிரம், விவசாய பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் என ரூ.210 கோடிக்குப் புதுச்சேரி அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

புயல் சேதத்தைப் பார்வையிட்டு மதிப்பிட மத்திய குழுவை அனுப்புமாறு மத்திய அரசைப் புதுச்சேரி அரசு கேட்டுக்கொண்டது. அதன் பேரில் வரும் 8 மற்றும் 9-ந்தேதி என 2 நாட்கள் டெல்லியிலிருந்து புயல் சேதத்தை ஆய்வு செய்ய மத்திய இணைச்செயலர் ராஜேஷ் குப்தா தலைமையில் மத்திய குழு புதுவை வருகிறது.

இதையொட்டி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் பொதுப்பணி, வேளாண், உள்ளாட்சி, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் சேத விவரங்களைச் சேகரித்து அறிக்கையாகச் சமர்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து அனைத்து துறைகளிலும் சேத விபரங்களை மதிப்பிட்டு அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *