
மதிய உணவுக்கு அல்லது இரவு உணவுக்கு நாக்குக்கு ருசியாக, எதாவது உணவு செய்து சாப்பிடலாம் என்று நினைப்பீர்கள், இந்தக் கேரட் குடைமிளகாய் சாதம் செய்து அசத்தலாம்.
இந்தச் சாதம் மிகவும் ருசியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்தக் கேரட் குடைமிகளாய் சாதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாகும்.சரி வாங்க கேரட் குடைமிளகாய் சாதம் எப்படி செய்வது என்று இவற்றில் நாம் காண்போம்.
தேவையான பொருட்கள்:
துருவிய கேரட்- 2 கப்
நறுக்கிய குடைமிளகாய்- அரை கப்
வேக வைத்த சாதம்- 2 கப்
அரிந்த பச்சைமிளகாய்- 2
அரிந்த மிளகாய் வத்தல்-2
காய்ந்த மல்லி- 2 டீஸ்பூன்
கொண்டைக்கடலை- 2 டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு- 2 டீஸ்பூன்
கடுகு- அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன்
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
சர்க்கரை- கால் டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கொத்துமல்லித் தழை- கால் கப்
எண்ணெய்- 3 அல்லது 4 டீஸ்பூன்
நெய்- அரை டீஸ்பூன்
கேரட் குடைமிளகாய் சாதம் செய்வது எப்படி:
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பை ஏற்றவும். எண்ணெய் காய்ந்தபின் காய்ந்த மல்லி, கொண்டைக்கடலை, மிளகாய் வத்தலை சேர்த்து வறுக்கவும்.இறக்கி வைத்துச் சூடு ஆறியபின் மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி வைக்கவும்.
மீண்டும் அதே வாணலியில் எண்ணெய், நெய் விட்டுக் கடுகை போடவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, அரிந்த பச்சைமிளகாய், குடைமிளகாய் இட்டுச் சிறிது வறுக்கவும்.
அத்துடன் கேரட் துருவல், மஞ்சள்தூள் உப்பு, சர்க்கரை, பெருங்காயம் மற்றும் அரைத்து வைத்த மசாலா விழுதைச் சேர்க்கவும். மிதமான சூட்டில் 2 நிமிடங்கள் விடவும்.இத்துடன் சாதத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.
தயாரான கேரட் குடைமிளகாய் சாதத்தின் மேல் கொத்துமல்லித் தழையை தூவி பரிமாறவும்.
மிகுந்த வாசனையுடன் அருமையான சுவை நிறைந்த கேரட் குடைமிளகாய் சாதம் தயார். இந்தச் சாதத்துக்கு வெண்டைக்காய் தயிர்ப்பச்சடி சரியான காம்பினேஷன்.

