கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக 8 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்குகிறார். இதில், பிரேசிலில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். 5 நாடுகள் பயணத்தை இன்று தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி, கானா, டிரினிடாட் அண்ட் டொபாக்கோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா நாடுகளுக்கு செல்கிறார். முதல்கட்டமாக, ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டுக்கு இன்று செல்கிறார். 30 ஆண்டுகளில் முதல்முறையாக கானாவுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.
2 நாள் பயணத்தை முடித்துவிட்டு, டிரினிடாட் அண்ட் டொபாக்கோ நாட்டுக்கு நாளை செல்கிறார். அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்திக்கும் மோடி, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். பயணத்தின் மூன்றாவது கட்டமாக, அர்ஜென்டினாவுக்கு சென்று, அந்நாட்டு அதிபருடன் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து, பிரேசிலுக்கு 5-ஆம் தேதி செல்லும் மோடி, 17ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார். தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக, நமீபியாவுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். அந்நாட்டு அதிபருடன் இருதரப்பு பேச்சு நடத்துவதுடன், நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் திட்டமிட்டுள்ளார்.
