
சென்னை விமான நிலையத்தின் சுவரில் சிறுவன் சிறுநீர் கழித்த விவகாரம் இணையத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Reclaim Chennai Streets என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படத்தில் சிறுவனின் தாயார் அருகே நிற்க சென்னை விமான நிலையளத்தின் டெர்மினல் 1 கேட் அருகே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். மேலும், சிறுவன் வேண்டுமென்றே இப்படி செய்திருக்கமாட்டான். தாயார் கொடுத்த தைரியத்தால்தான் இதை செய்திருக்கிறான். மற்றொரு நாட்டில் , இந்த மாதிரி சிறுநீர் கழிக்க முடியுமா? என்றும் இந்த புகைப்படத்துக்கு கேப்சன் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த புகைப்படம் வைரலானதையடுத்து , இணையத்தில் நெட்டிசன்கள் பல்வேறு விவாதங்களை எழுப்பினர். பொதுவெளியில் ஒழுக்கம் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் . இது போன்று நான் எங்கேயும் கண்டதில்லை என்று ஒருவர் கடுமையாக கண்டித்துள்ளார். ‘அந்த சிறுவனுக்கு 500 டாலர்கள் அபராதம் விதிக்க வேண்டும். அவனின் புகைப்படத்தை விமான நிலைய கழிவறையில் ஒட்ட வேண்டும். அப்படியென்றால்தான், மீண்டும் அப்படி செய்யமாட்டான் என்று இன்னொரு நெட்டிசன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், சிறுவனின் செயலை நியாயப்படுத்தியும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். டெர்மினலுக்குள் சென்று விட்டால், கழிவறைகள் ஆங்காங்கே இருக்கும். ஆனால், டெர்மினலுக்கு வெளியே கழிவறைகளை காண முடிவதில்லை. 10 ,15 நிமிடங்கள் நடந்து சென்ற பின்னரே, கழிவறைக்கு செல்ல முடியும். எங்காவது ஒரு இடத்தில் ஈ-டாய்லெட்டை காணலாம். மோசமான விமான நிலைய கட்டுமானம்தான் இதற்கு காரணமே தவிர மக்கள் அல்ல என்றும் கூறியுள்ளனர்.


