Karnataka Raj Bhavan: ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவில் ஒரு மர்ம நபர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த நபர், கர்நாடக ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அபாயம் விளைவிக்கக்கூடிய எந்த விதமான பொருளும் கைப்பற்றப்படவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இன்றும் சோதனை நடத்தப்படும் என தெரிகிறது.

சமீபத்தில் பசவேஷ்வர் நகரில் உள்ள 7 பள்ளிகளை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த பள்ளிகளில் ஒன்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது. அதன்பின்னர் பல கல்வி நிறுவனங்களுக்கு இ-மெயில் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனால் போலீசார் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று முன்னெச்சரிக்கையாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு சோதனை செய்தனர். இதில் எந்தவிதமான அபாயகரமான பொருளும் கைப்பற்றப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருக்கலாம் என்ற அறிகுறிகள் இருந்தபோதிலும், போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *