
சென்னை: அண்ணாமலை பாத யாத்திரை செல்லும் போது பொது மக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற “புகார் பெட்டி” கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சி மீதான புகார்களை வாங்கி வந்து அது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த மத்திய அரசுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். ‘என் மண், என் மக்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நடைபயணத்தை ஜூலை 28ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் பல்வேறு ஊர்கள் வழியாக பயணித்து ஆறு மாதங்களுக்கு பின்னர் இந்த பயணம் சென்னையில் நிறைவடைகிறது.
சமீபத்தில், வரும், 28ல் துவங்கும் ‘என் மண், என் மக்கள் பாதயாத்திரையில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 20,000 பேர் பங்கேற்க வேண்டும் என, மாவட்ட தலைவர்களிடம், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த பாத யாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள கிராமங்கள், சிறு நகரங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் பாஜ.,வை கொண்டு செல்லும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட உள்ளார்.
இந்நிலையில் பாதயாத்திரை குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பாதயாத்திரையின் போது மக்களிடம் தமிழக அரசு மீதான புகார்களை கேட்டு பெறுவதற்கு ‘மக்கள் புகார் பெட்டி’ கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மக்களிடம் புகார்களை வாங்கி வந்து, அது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும், மத்திய அரசுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

