
திருப்பூருக்காக நீங்கள், உங்களுக்காகத் திருப்பூர், எங்களுடன் நீங்கள், உங்களுடன் நாங்கள் எனப் பல தலைப்புகளில் அவர்களைச் சந்தித்து தேர்தல் பிரசாரத்தை திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., வினர் துவங்கியுள்ளனர்.
திருப்பூர்: பாராளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றிக்கனியை பறிக்கும் நோக்கில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., வினர் பல்வேறு தேர்தல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். நகரங்களைக் காட்டிலும், புறநகர் பகுதிகளான கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி களமிறங்கி வேலை செய்கின்றனர். அதன்படி தினமும் மண்டலம், சக்தி கேந்திரம், பூத் நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, மத்திய அரசின் திட்டங்கள்குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
தொழில் நகரமான திருப்பூரில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், ராஜஸ்தானெனப் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்குத் தங்கி பல்வேறு பனியன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள், தொழில் துறையினரின் ஓட்டுக்களை வளைக்கும் நோக்கில், பா.ஜ.க., பிறமொழி பிரிவினர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சில நாட்களுக்கு முன் திருப்பூரில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழில்துறையினருடன் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.
அதில், ராஜஸ்தான் மாநில எம்.பி., ராஜேந்திரகுமார் கெலாட் பங்கேற்று கலந்துரையாடினார். இரண்டாம் கட்டமாக, மற்றொரு கூட்டத்தைப் பா.ஜ.க., வினர் வரும் 12-ந் தேதி திருப்பூரில் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க., நிர்வாகிகள் கூறியதாவது:-திருப்பூரில் வாழும் வடமாநில தொழிலாளர்களைச் சந்தித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி வருகின்றோம்.
இப்பணி பா.ஜ.க., பிறமொழி பிரிவினர் நடத்தி வருகின்றனர். தற்போது, இரண்டாம் கட்டமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். திருப்பூருக்காக நீங்கள், உங்களுக்காகத் திருப்பூர், எங்களுடன் நீங்கள், உங்களுடன் நாங்கள் எனப் பல தலைப்புகளில் அவர்களைச் சந்தித்து தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.




