
பீகாரில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யத் தடுத்த கணவரை, மனைவி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் இப்போது வீடியோதான் மற்றவைகளைவிட ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது. அதிலும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களைத் தான் அதிகமான நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை பலரும் இந்த இன்ஸ்டாகிரம் ரீல்ஸை பயன்படுத்தி வருகின்றனர். இதற்குப் பலரும் அடிமையும் ஆகியுள்ளனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்யத் தடுத்த கணவரை, மனைவி கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் நர்ஹான் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வர் குமார். இவர் கொல்கத்தாவில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராணி குமாரி. இவர்களுக்குக் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில், கொல்கத்தாவில் வேலை செய்து வந்த மகேஷ்வர் குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகாருக்கு வந்திருந்தார். இவரது மனைவி ராணி குமாரி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதனால், இவர்களுக்கிடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், நேற்று ரீல்ஸ் செய்துக் கொண்டிருந்தபோது, கணவர் மகேஷ்வர் குமார் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
வாக்குவாதம் நீடித்த நிலையில், மனைவி ராணி குமாரி, ஆத்திரத்தில் கணவர் மகேஷ்குமாரை கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறார். பெண் ராணி குமாரியின் தாயும், மகேஷ்குமாரை கொலை செய்திருக்கிறார். பின்னர், இரவில் கொல்கத்தாவிலிருந்து மகேஷ்வர் குமாரின் சகோதரர் போன் செய்திருக்கிறார்.
அப்போது, வேறொவர் போனில் பேசியதால், சந்தேகம் அடைந்த மகேஷ்வர் குமாரின் சகோதரர், நேரில் சென்று பார்க்கும்படி தனது தந்தையிடம் கூறியிருந்தார். இதனை அடுத்து, மகேஷ்வர் குமாரின் தந்தையும் நேரில் சென்று பார்த்தபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்தச் சம்பவம்குறித்து உயிரிழந்தவரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த மகேஷ்வர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவி ராணி குமாரி மற்றும் அவரது தாயை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


