
வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியதால் ஆத்திரத்தில் கொதிக்கும் எண்ணெயைக் கணவர்மீது மனைவி ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி அடுத்துள்ள வெள்ளியங்குன்றம் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மாலதி (28). இவர் ஜூஸ் கடையில் வேலை செய்து வந்தார். இவர் வேலைக்குச் செல்வது கணவருக்குப் பிடிக்கவில்லை. எனவே அவர் மனைவியை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதைக் கேட்காமல் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் இது தொடர்பாகக் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மாலதி தாலி கட்டிய கணவர் என்று கூடப் பாராமல் கொதிக்கும் எண்ணெயை எடுத்து மேலே ஊற்றியுள்ளார்.
இதில், செந்தில்குமார் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. இவரதுது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


