
பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானியர்!
வெளிநாடுகளில் கைது செய்யப்படும் பிச்சைக்காரர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், அந்த நாட்டிலிருந்து அதிக எண்ணிக்கையில் பிச்சைக்காரர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களுக்கான செனட் ஸ்டாண்டிங் கமிட்டிக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து தொழிலாளர் இடம்பெயர்வு பிரச்சினைகுறித்து செனட் குழுவில் நடந்த விவாதத்தின்போது, வெளிநாட்டு அமைச்சக செயலாளர் சுல்பிகர் ஹைதர் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார் என்று பாகிஸ்தான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து அதிகமான பிச்சைக்காரர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதால், அந்நாட்டில் ஆள் கடத்தல் பிரச்சனை மோசமாகி வருகிறது. இந்தப் பிச்சைக்காரர்கள் சவுதி அரேபியா, ஈரான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளுக்குள் நுழைவதற்காகச் சுற்றுலா விசாக்களை பயன்படுத்திக் கொள்வதாக ஹைதர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்கள் ஜப்பானுக்கு பறக்கும் போக்கு அதிகரித்து வருவது குறித்தும் அவர் கூறியுள்ளார். ஹராம் போன்ற புனிதத் தலங்களுக்குள் பிடிபட்ட பிக்பாக்கெட்டுகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என்றும் அவர் கூறினார்.
பிச்சைக்காரர்கள் பெரும்பாலும் உம்ரா விசாவில் செல்கிறார்கள், அவர்களுக்கு வேலை விசா கிடைக்காது என்றும் அவர் கூறியதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் தெரியவருகிறது. இப்படி புலம்பெயரும் மக்களுக்கு ஜப்பான் புதிய புகலிடமாக மாறியுள்ளதாகவும் சவுதி அரேபியா இப்போது பயிற்சி பெறாத தொழிலாளர்களைவிட திறமையான தொழிலாளர்களையே விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

