Annamalai: தாதுமணல் எடுக்கத் தடை; மத்திய அரசுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை!

Advertisements

தென்காசி மாவட்டதில் தாது மணல் எடுக்க மத்திய அரசு விதித்துள்ள தற்காலிக தடைக்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறிஞ்சான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. தமிழக அரசும் இதற்கான ஒப்புதலை வழங்கியிருந்ததாக அறிகிறோம். ஆனால், குறிஞ்சான்குளம் பகுதி பொதுமக்களும், விவசாயிகளும், தங்கள் பகுதியில் தாது மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். டெல்டா பகுதியில் புதிய நிலக்கரி சுரங்கங்களிற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டபோது அதை ரத்து செய்திடத் தமிழக பாஜக எடுத்த முன்னெடுப்பைப் போல, இந்த கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தோம்.

மூத்த அரசியல் தலைவரும், வழக்கறிஞருமான, ராதாகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களை நேரில் சந்தித்து, பொதுமக்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, குறிஞ்சான்குளம் பகுதியில், தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று, குறிஞ்சான்குளம் பகுதியில் தாதுமணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ள மத்திய அரசுக்கு, தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பிலும், தென்காசி மாவட்ட பாஜக சார்பிலும், மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்காக மீண்டும் ஒப்பந்தப்புள்ளிகள் கோருகையில் அப்பட்டியலிலிருந்து குறிஞ்சான்குளம் நிரந்தரமாக நீக்கப்படும் என்ற நம்பிக்கை தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *