
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பேராசிரியர் மீது வந்துள்ள குற்றச்சாட்டு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பேராசிரியர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாக, மாணவி புகார் அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பல மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளதையும், பாதுகாப்பான முறையில், அவரது பாடப்பிரிவு மாணவிகளிடம் விசாரணை நடத்த அவர் வலியுறுத்தியுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். கல்வி கற்க வரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசு மற்றும் கல்வி நிலைய நிர்வாகங்களின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்திக் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.



