
ஆந்திராவிலிருந்து தனியார் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 4000 போதை மாத்திரைகளை தமிழக-ஆந்திர எல்லையான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் காவல் துறையினர் பறிமுதல் செய்து அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக ஆந்திர எல்லை பகுதியான எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நாள்தோறும் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம்.அந்த வகையில் ஆந்திராவிலிருந்து பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாகக் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறைக்குத் தகவல் கிடைத்ததைதொடர்ந்து சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து வந்த தனியார் பேருந்தைச் சோதனை செய்தபோது அதில் ஒரு பையில் 4000 போதை மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரைக் கைது செய்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இதுபோல் போதை மாத்திரைகள் கடத்திவரப்பட்டதா? யாருக்கு விநியோகம் செய்யப்படுகிறது? இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் யார்? என்பது குறித்து கைது செய்யப்பட்ட குப்புசாமியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


