
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாயும், வாகனங்களுக்கான எரிவாயு விலை கிலோவுக்கு 2 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளார். மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வைத் தவிர்த்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே அதிகமாக உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதால் காய்கறிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட இன்றியமையாப் பொருள்களின் விலை கணிசமாக உயரும் என்று தெரிவித்துள்ளார்.
இது ஏழைகள் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.


