
ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர்களாக இந்திய வனப்பணி அலுவலர்களை நியமிப்பதைத் தமிழக அரசு கைவிட வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்களாக இந்திய வனப்பணி அலுவலர்களை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அது ஊரக மக்களுக்கான சேவையை சீர்குலைத்து விடும் என்று தெரிவித்துள்ளார்.
இது ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வழங்கப்படும் தண்டனையாகவே அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த முடிவால் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஊரகப் பகுதிகளின் வளர்ச்சி, மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், ஊரகவளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைப்பதை உறுதி செய்யவும் இந்நியமனத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.


