
பெங்களூரு: பாங்காக் நகரிலிருந்து பெங்களூரு வந்த விமானத்தில் 10 அரிய வகை மஞ்சள் அனகோண்டா பாம்புகள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
வன விலங்குகளைச் சட்ட விரோதமாகக் கொண்டு செல்வது, உலகம் முழுவதும் கடும் தண்டனைக்குரிய குற்றம். அப்படி இருந்தும், பணத்துக்கு ஆசைப்பட்டு வன விலங்குகளைக் கடத்திச் செல்வது தொடர்கிறது. பாங்காக் நகரிலிருந்து பெங்களூரு வந்த விமானத்தில் 10 அரிய வகை மஞ்சள் அனகோண்டா பாம்புகள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
பயணி ஒருவரின் லக்கேஜ் பரிசோதித்தபோது, பாம்புகள் உள்ளே இருப்பது தெரியவந்தது.கடத்தி வந்த வாலிபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த மஞ்சள் அனகோண்டா பாம்புகள், பராகுவே, பொலிவியா, பிரேசில், அர்ஜென்டினா, உருகுவேயெனத் தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
அவற்றை இந்தியாவுக்கு என்ன காரணத்துக்காகக் கடத்தி வந்தனர் என்று அதிகாரிகள் விசாரிக்கின்றனர். பெங்களூருவில் கடந்தாண்டில் மட்டும், கடத்தி வரப்பட்ட கங்காரு, ஆமை, முதலை, மலைப்பாம்பு உட்பட 234 விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


