TASMAC: போராட்டத்தில் ஈடுபட்ட மது பிரியர்கள்!

Advertisements

போராட்டத்தில் ஈடுபட்ட மது பிரியர்கள்!

டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டாமெனக் கூறி  மது பிரியர்கள் மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தாராபுரம் அருகே டாஸ்மாக் மதுபான கடையை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து மது குடிப்போர் சங்கத்தின் சார்பில் கடை அடைப்புப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர் பாதை பகுதியில் சுமார் 6 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் மதுபான கடையை அகற்றக்கோரி கடந்த 10ம் தேதி அன்று பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுபான கடையை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் மற்றும் தனி வட்டாட்சியர்  ஜெகஜோதி,  திருப்பூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் நவம்பர் 10ம் தேதி அன்று டாஸ்மாக் மதுபான கடை செயல்படும் இடத்திலிருந்து அகற்றப்படும் என உறுதியளித்தனர். இதனால் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் தேர் பாதை பகுதியில் செயல்பட்டு வரும் வணிகர்கள் ஒன்றிணைந்து மதுபான கடையை அகற்றினால் தங்களுக்கு வணிகம் பாதிக்கும் எனக்கூறி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டாமெனக் கூறி மது பிரியர்கள் கடையின் முன் கூடி தங்களுக்கு தற்போது செயல்படும் இடத்திலேயே மதுபான கடை வேண்டுமெனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *